அகத்தியர் அருளிய ஐந்து வகையான ஆசிரமங்களில், கடைசி இரண்டு வகை ஆசிரமங்களைப் பற்றி இன்று பார்ப்போம். இவை இரண்டும் மிக உயர் நிலை ஆசிரமங்களாக கூறப் படுகிறது.
வானப்பிரஸ்த ஆசிரமம்.
காணவே சன்யாச ஆச்சிரமஞ் சொன்னேன்
கருணையுடன் வானப்பிரஸ்த னாச்சிரமங்கேனே
கோணவே சுகதுக்கம் ரெண்டும்விட்டு
சூழ்காவிற் கிழங்கருத்திச் சுத்தமாக
பூணவே பனிவெயிலிற் பொருந்திமைந்தா
புகழ்பஞ்சாக் கினிநடுவி லிருந்துகொண்டு
பேணவே குருபதியில் பெலமாய்நின்றால்
பிலக்குமடா ஆச்சிரமம் பேணிப்பாரே.
பாரப்பா வானப்பிரஸ்த னாச்சிரமந்தானும்
பதிவாகி நிற்பதற்கு மந்திரங்கேளு
நேரப்பா தானிருந்து குருவைப்போற்றி
நீமகனே ஓம்அம்சிவ வசியென்றேதான்
காரப்பா புருவமதில் தினம்நூறுமைந்தா
கருணையுட ணுருவேறக் காச்சிகாணும்
சீர்பெருகும் வானப்பிரஸ்த நாச்சிரமந்தானும்
சிவசிவா திறமாகுஞ் சிவயோகம்பாரே.
இந்த வகை ஆசிரமவாசிகள் சுக துக்கங்கள் தங்களை பாதிக்காத நிலையில் இருப்பவர்களாம். மழை வெய்யிலைப் பொருட்படுத்தாமல் கனி, கிழங்கு வகைகளை மட்டும் உணவாக உட் கொள்வார்களாம். பஞ்சாக்கினியின் நடுவில் இருந்து யோகம் நிஷ்டையில் இருந்து வருவார்கள் என்கிறார் அகத்தியர்.
இத்தகையவர்கள் குருவானவரை போற்றி வணங்கி பின்னர் "ஓம் அம் சிவ வசி" என்னும் மந்திரத்தை தினமும் நூறு உரு செபித்து வருவார்களாம். இப்படி செபித்து வருவதன் மூலம் இந்த படி நிலையைக் கடந்தவர்களாகி அடுத்த படிநிலைக்கு செல்லும் தகுதியை அடைவார்கள் என்கிறார்.
பாராப்பா புலத்தியனே சொன்னவகைநாலும்
பதிவான அதிலிருந்து மனஞ்செவ்வையானால்
நேரப்பா அதிவர்னாச் சிரமந்தன்னை
நேர்மையுடன் சொல்லுகிறே னினைவாய்க்கேளு
காரப்பா பிரபஞ்ச மாயைவிட்டு
கனயோக நிஷ்டைதனைக் கடக்கத்தள்ளி
தேரப்பா செவியுடனே விழியுங்கெட்டு
சிவசிவா சின்மயமாய்த் தெளிவார்காணே.
தெளிவற்றுச் சுளியற்றுச் செகமுமற்று
சிவசிவா வென்றதொரு சத்தமற்று
ஒளிவற்று ஆகாச ஓசையற்று
ஒன்றுமுதல் எட்டுரெண்டு உணர்வுமற்று
நெளிவற்று நினைவற்று நேர்மையற்று
நேசமுதல் பாசமற்று நிலையுமற்று
அளிவற்று வெளியொளியில் யெங்குந்தானாய்
அமர்ந்திருந்தா லாதிவர்னாச் சிரமம்பாரே.
முந்தைய நான்கு வகையான ஆசிரமங்களில் வாழ்ந்து கடைத்தேறியவர்கள் மட்டுமே இந்த ஆசிரமத்தில் வசிக்க முடியும் என்கிறார் அகத்தியர். இந்த நிலையானது பிரபஞ்ச மாயைகளையும், நிஷ்டை நிலைகளையும் கடந்து தெளிவற்று, சுழிவற்று, செகமும் அற்று சிவசிவா என்ற ஒலியும் அற்று ஒன்று முதல் எட்டிரெண்டு என்ற உணர்வுகளும் அற்று, நினைவு அற்று, நேசம் முதல் பாசம்வரையான அத்தனை உணர்ச்சிகளும் அற்று எங்கும் நானே என்ற நிலையில் வாழ்ந்திருப்பதே அதிவர்ன ஆசிரம வாழ்கை என்கிறார்.
இப்படியாகவே ஆசிரமங்கள் முற்காலத்தில் வழக்கில் இருந்திருக்கின்றன. அவரவர் ஆர்வம், உடல் மற்றும் மன வலிவு, அதைத் தாண்டிய வாழ்வியல் நோக்கம் மற்றும் அதன் தேவைகளைப் பொறுத்து இந்த ஆசிரமஙக்ளின் ஊடே வாழ்ந்திருக்கின்றனர். இத்தகைய வரையறைகள் இன்றைக்கும் பின்பற்றப் படுகிறதா, அல்லது இப்படித்தான் இன்றைய ஆசிரமங்கள் இயங்குகிறதா என்கிற கேள்விக்கான நேர்மையான பதிலை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
இந்த தகவல்கள் யாவும் “அகத்தியர் பரிபூரணம்” என்னும் நூலில் இருந்து தொகுக்கப் பட்டவை.
வேறொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.


